சாதனை செய்வதற்கு மன உறுதியும், விடாத முயற்சியும் மட்டுமே அவசியம். அந்த வகையில், கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறும் முயற்சியாக அமெரிக்காவில் தொடர்ந்து தொலைக்காட்சி பார்க்கும் போட்டி ஒன்று நடைபெற்றது. இதில், தொடர்ந்து 87 மணி நேரம் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த 3 பேர் வெற்றி பெற்று, கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.
அமெரிக்க நெவாடாவின் லாஸ்வேகஸ் மாநாட்டு மையத்தில் டான் ஜோர்டன், ஸ்பென்சர் லார்சன், கிரிஸ் லாப்லின் என்ற மூன்று பேர் இந்த கின்னஸ் சாதனைக்காக தொடர்ந்து தொலைக்காட்சி பார்க்கும் போட்டியில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியானது நேரடியாகவும் ஒளிபரப்பப்பட்டது. கின்னஸ் விதி முறைகளின்படி அவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஐந்து நிமிடங்கள் என ஓய்வு அளிக்கப்பட்டது. இதில் அவர்கள் கழிப்பறைக்குச் செல்வதற்காக அந்த நேரத்தை எடுத்துக்கொண்டனர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கிறபோது அலைவரிசைகளை மாற்றிக்கொள்ளவும், சாப்பிட மற்றும் குளிர்பானங்கள் அருந்த மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்கள் மூன்று பேரும் தொடர்ந்து 5 நாட்களில் 87 மணி நேரம் தூங்காமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்தனர். இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவை சேர்ந்த கேரின் ஷ்ரீவ்ஸ் மற்றும் ஜெரேமியா பிராங்கோ என்ற இருவர் தொடர்ந்து 86 மணிநேரம் 37 நிமிடங்கள் தொலைக்காட்சி பார்த்ததே கின்னஸ் சாதனையாக இருந்தது.

0 comments
Post a Comment